Monday, 17 July 2017

மனமே நீ கண்ணுறங்கு..!


(காயங்களால் சூழப்பட்ட இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கத்தில் என் பேனா சிந்திய முத்துகளை உங்கள் முன் தொடுக்கிறேன்) 


ஆராரோ பாட யாருமில்லாது, பொழுதெல்லாம் 
கதறி அழுகின்ற ஊமை உள்ளத்திற்கு என் 
தங்க வரிகளால் தாலாலோ பாடுகிறேன் 
மனமே நீ கண்ணுறங்கு....! 

பயப்படாதே!காயங்கள் மட்டுமே அறிந்த உன் 
இதயத்தை பிழிந்தெடுத்து குருதிகுடிக்கும் 
பொய்யுருவில் வருகின்ற சில 
அகோரிகளின் எச்சம் நானல்ல...! 

சில நூறு அறுவை சிகிச்சை 
செய்த இதயத்திற்கு வார்த்தைகளால் 
தையலிட முற்படுகிறேன்...! 


நீ உலகத்தின் விசித்திரம் -நீ 
உண்டாக்கிய கண்ணீர் வெள்ளத்தில் 
நீயே அடித்துச் செல்லப்படுகிறாய்....! 


உன் உண்மை கண்ணீரையும் பொய் 
சிரிப்பையும் இதுவரையில் உணர்ந்தோர் 
ஒன்றோ இரண்டோ இருக்கலாம்..! 

பூதங்கள் தேவையில்லை பயமுறுத்த காரணம் 
இது ப்ருடஸ்கள் நிறைந்த உலகமடா..! 

ஒரு நிமிடம் என் எழுத்தாணி 
உனக்காக கண்ணீர் சிந்துகிறது...! 

கவலை காட்டில் தொலைந்து போகாதே! 
எழு ,கண்ணீர் துடை,உற்சாகம் கொள்..! 
சோகம் மறந்து லட்சியம் கைகொள்...! 


இருட்டு உலகத்தின் குருட்டு விழிகள் 
உன் உணர்வுகளை 
நெகிழிப் பந்துகளாக்கினாலென்ன,நீ 
நெகிழா நெஞ்சு கொள்..! 


நிராகரிப்புகளுக்காக நீ 
நிர்மூலமாகலாமா? 
உந்தியேலும் ஆற்றல் கொள்..! 

இடைவெளி இல்லா இரட்டை பிரசவம் 
போல வேதனையும்,தோல்விகளும் 
உனக்கு கண்ணாமூச்சி காட்டினாலென்னா, 
மனமே நீ துயரமறந்து கண்ணுறங்கு..! 

மண்தோடும் மா மரக்கிளைகள் 
கலங்குவதில்லை,மதி கொண்ட 
மானுட மனமே,அமைதியாய் 
நீயும் கண்ணுறங்கு....! 

நினைத்து எல்லாம் நிஜமாகும் 
இனி நித்தமும் நமக்கொரு வரமாகும் 
நம்பிக்கை பூக்கள் உதிரா வரை 
நாளைகள் எல்லாம் நமதாகும்...! 

நடப்பவை எல்லாம் இனிதாகும் மனமே 
நலமாய் நீ கண்ணுறங்கு, 
மனமே நீ கண்ணுறங்கு....! 


கோவை.சரவண பிரகாஷ்.

Wednesday, 5 July 2017

கலங்காதிரு நன்னெஞ்சே!

                                                      கலங்காதிரு நன்னெஞ்சே!
                                                *********************************************************************

சொல்லி அழ யாருமின்றி,உன் வார்த்தைகள் தவித்தாலும்
யாருமில்லா தனிமை உன்னை விட்டு விலக மறுத்தாலும்
இன்னும் நீ கடக்க வேண்டிய தூரம் நின் கண்ணெதிரே  உண்டு
அதுவரை கலங்காதிரு நன்னெஞ்சே...!

உற்றார்,உறவினர் யார் தடுத்தாலும்,உயிராய் நினைத்த
நண்பர்கள் உன்னை பிரிந்தாலும்,சோக காட்டில் உன்
சுவடுகள் பதிந்தாலும்,சரித்திர நாயகன் நீயென
உலகம் பேசும்வரை கலங்காதிரு நன்னெஞ்சே....!

வற்றாத கவலை கடலலைகள்  உன் மனபிரேதேசத்தில் சூழ்ந்தாலும்
துரோகம்,சூழ்ச்சி,கயமை இவைகளால் நீ சூழப்பட்டாலும்
நாளெல்லாம்  கண்ணீரில் நீ கரைந்து போனாலும்,கடமைகள்
காத்திருக்கிறது அதற்காகவேனும் கலங்காதிரு நன்னெஞ்சே...!


எத்தனை நாக்குகள் உன்னை கீறிச்சென்றாலும்,உன்னவரே
உன்னை நிந்தனை செய்தாலும்,அணையாத சோகத் தீ
உன்னை கொஞ்சம் கொஞ்சமா சுட்டெரித்தாலும்,உந்தன் புகழொளி
ஒருநாள் சுடர்விட்டெரியும்,அதுவரையில் கலங்காதிரு நன்னெஞ்சே...!

புரிந்தவர்கள் பிரிந்து சென்றாலும்,பிரிந்தவர்கள் புரிந்து கொன்றாலும்
உனக்குரியவர்களே உன் உயிர் பிழிந்தாலும்,நினைவுகளால் நித்தம் நீ
கைதாகிறபோதும்,புது விடியல் ஒன்று உனக்காய் காத்திருக்கும்
அதுவரையேனும் நீ கலங்காதிரு நன்னெஞ்சே.....!



கோவை.சரவண பிரகாஷ்.