Friday, 27 July 2018

முகவரி தெரியாதவருக்கு ஒரு கடிதம்...!





அன்புள்ளவருக்கு,

              இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு நீங்கள் என்னை மன்னிக்க  வேண்டும்,காரணம் உங்களுக்கும்  அதன் அர்த்தம் புரியாமல் போயிருக்கலாம் அல்லது பிடிக்காமல் போயிருக்கலாம்.இந்த கடிதம் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருப்பதற்காக நான் பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்கிறேன்.உங்களை எனக்கு தெரியாமல் இருக்கலாம்,இந்த பூமி பந்தின் ஒரு ஓரத்தில் நீங்கள் யாரோ ஒருவராக இருக்கலாம்,ஆனாலும் காலத்தாலும்,உலகத்தாலும் கைவிடப்பட்ட மனிதனின் உணர்வுகளையும்,காயங்களையும் இந்த கடிதத்தின் வாயிலாக உங்கள் கண்களாவது படிக்கிறதே அதற்காக நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.எத்தனை ஆண்டுகளுக்குப்  பிறகு,எத்தனை இடர்களை கடந்து எப்போது இந்த கடிதம் உங்களை வந்தடைந்திருக்கிறது என்பதை நான் அறியேன்.ஒருவேளை இந்த கடிதத்தை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரம் நான் இந்த பூமியில் இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் நண்பரே சத்தியம் சொல்கிறேன்,எனது வரிகள் ஒருபோதும் மங்காதவைகள் ஏனென்றால் அவை என் உணர்வுகளின் பிம்பங்கள்.
                  இருபத்தெட்டு வயதாகிறது எனக்கு.படிப்பு,வேலை என்று சராசரி மனிதனுக்கு உண்டான சடங்குகள் யாவும் குறையின்றி நடந்து கொண்டு தான் இருந்தன.ஆனால் வாழ்க்கை சராசரியாக முடிந்து போக மனிதம் ஒன்று இயந்திரம் இல்லையே.வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருந்தது.ஆனால் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எனக்குள் ஒரு கவலை,சலனம்,ஏக்கம் எப்போதும் இருந்துகொண்டு இருந்தது.நான் நானாக இருக்க முயற்சி செய்தேன்.ஆனால் கடைசியில் என்னை அவர்கள் மாற்றிவிட்டார்கள்.வெளி இடங்களிலும்,பணி இடங்களிலும் ஒருவாறே இருப்பேன்.அதிக நேரங்களில் மௌனம் ஏன் இயங்க இருக்கும்.மனிதர்களின் மொழியை நான் பேசியபோதெல்லாம் எனக்கு கிடைத்தது அவமானமும்,உதாசீனமும்,சுடுசொல்ல்லும் தான்.அதனால் நான் பேசுவதே இல்லை அல்லது என் பேச்சை கேட்பதற்கென யாருமே எனக்காக இருந்ததில்லை.அன்பரே,இத்தனை நாட்களாய் என் இதயத்தின் ஆழத்தில் அடக்கி வைத்திருந்த அலைகளை வெளியேற்றுகிறேன்.நீங்கள் எப்போதுவது ஒரு தீவில் நடுப்பகுதியில் தண்ணீர் இன்றி தவித்ததுண்டா?கற்பனை செய்து பார்த்ததுண்டா.இருபத்திரண்டு ஆண்டுகளாக நானும் என் மனமும் பாலைவனத்தில் தான் இருக்கிறோம்,உடல் மட்டும் தான் பூவுலகில் நிலவுகிறது.இந்த வார்தைகளை எழுதும் போது என் இதயம் வெதுவெதுக்கிறது,கைகள் நடுங்குகிறது.தனிமை....தனிமை....தனிமை....!வற்றாத தனிமை என்னும் நதியின் சொந்தக்காரன் நான்.உலகத்தில் எல்லோருக்கும் யாராவது இருப்பதாக எனக்குள் ஒரு நம்பிக்கை,ஆனால் நான் என் எண்ணங்களை இறக்கி வைத்து இளைப்பாறத் தான் யாருமே இருந்ததில்லை.எழுத்தை தவிர...!சோகங்களை சொல்லி அழவும்,மன வலிகளுக்கு மருந்திடவும் ஒருவரைக் கூட நான் சம்பாதித்ததில்லை.அருமை நண்பரே,சிறு வயதில் இருந்தே இதுவரை நான் நேசித்த எதுவுமே எனக்கு கிடைத்ததாக நினைவில்லை.என்னை   நேசித்தவர் யாவரையும் நான் பதின்ம பருவத்தில் கண்டதில்லை.ஒருநாள் நான் கண்டுகொண்டேன் "அன்பு" அது தான்  உயிர்களும் மண்ணில் வாழ்வதற்கு காரணமாக இருக்கின்றது.அன்பு செய்ய கற்றுக்கொண்டேன்.அன்பினை அனைவர்க்கும் அள்ளி வழங்கினேன்.அன்பையே என் பன்பாக்கி கொண்டேன்.கொடுக்க கொடுக்க நான் பெற்றதெல்லாம் "வெறுமை" மட்டும் தான்.எதுவுமில்லாத வெறுமை,யவருமில்லாத தனிமை.அவர்கள் சொன்னார்கள் அன்பு எதனையும் எதிர்பார்க்காது,உண்மை தான் ஆனால் இதயம் குறைந்தபட்ச ஆறுதலை எதிர்பார்ப்பது தவறென்று எந்த தத்துவ புத்தகமும் சொன்னதாக எனக்கு நினைவில்லை.நான் குறைந்தபட்ச அன்பினை எதிர்பார்த்தேன்,பாசத்தோடு இதயத்தை வருடுகிற கன நேர மகிழ்ச்சியை எதிர்பார்த்தேன்,கண்ணீர் துடைக்கிற விரல்கள் ஒன்றாவது கிடைக்குமா என தேடினேன்,உயிர் கொடுத்தவர்களை தவிர அன்பினை உதிரம் ஆக்கி உயிர் கொடுப்பவர்கள் உண்டா என என்னையே நான் கேட்டேன்.விடையாய் வந்த நண்பர்கள் கண்ணீர் துளிகள் மட்டுமே!உங்களுக்கு ஒன்று தெரியுமா,என் ரணங்களையும்,கண்ணீரையும் முழுமையாக அறிந்தது என் தலையணை மட்டும் தான்.பாவம் இத்தனை வருடங்களாக இப்படி பட்ட மனிதனோடு இருந்ததற்கு அதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கலாம்.எத்தனையோ சூழ்நிலைகளில் வார்த்தைகளை உதட்டின் வழியாக வெளிநடப்பு செய்யமுடியாமலும்,உள்ளத்தின் உள்ளே அடக்க முடியாமலும் என் இதயம் குமுறிய குமுறல்களை விட எரிமலைகள் ஒன்றும் பெருசென எனக்கு தோன்றவில்லை.பல்லாயிரம் முறை உள்ளாரா நான் அழுதிருக்கிறேன் தெரியுமா..!

                             அநேக நேரங்களில் நான் கடல் அலை முன் நின்று கொண்டு நிலவினை பார்த்துக்கொண்டுஇருப்பேன்,அந்த நிலவும் நானும் ஒன்றென நினைப்பேன்.ஆனால் நிலவிற்கு கூட உடன் நட்சத்திரங்கள் பல இருக்கின்றனவே!என் தனிமை தீயில் என் மனம் எப்போதோ கருகிவிட்டது.என் கடுமையான அழுகை வேள்வியினால் கூட அதை காப்பாற்ற முடியவில்லை.அந்த தீயில் என் உணர்வுகளும் கொல்லப்பட்டு இருந்தால் வசதியாக இருந்திருக்கும்.இந்த அழுகையும் ஏக்கமும் என் பல இரவுகளை கொள்ளை அடித்திருக்கின்றன.இது இந்த வெண்ணிற இறவை போல.கொஞ்சம் நிறுத்தி விட்டு வார்த்தைகளை தொடர்கிறேன்,கண்ணீர்த்துளிகள் இந்த காகிதத்தையும் அழுக்காக்கி விட்டது.துடைத்துவிட்டு எழுதுகிறேன்.தாஸ்தோவ்ஸ்க்கியின் நாயகன் போலவே நான் கனவுலகில் வாழும் மனிதனாகவே இருக்கிறேன்.அவனை போலவே வெறுமையும்,தனிமையும் மட்டும் சூழ்ந்த மனிதனாக இருக்கிறேன்.அந்த நாயகனை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஒரு தனிமையாளனின் கண்ணீரின் மொழிகளை இன்னொரு தனிமையாளன் தானே உணர்ந்துகொள்ள முடியும்.எனக்குள் ஆயிரம் கேள்விகள் ஆனால் அவற்றிற்கு பதில் தரவும்,ஆறுதல் அளிக்கவும்,கண்ணீர் துடைக்கவும், ஒருவரும் இருந்ததில்லை,இருப்பதுமில்லை!இறைவனும் கூட கருணை கொண்டதில்லை.இதோ அந்த மோசமான பதில் தெரியாத இரவுகளை போல இந்த இரவும் கண்ணீரில் கரைந்து போகிறது.

ஆனாலும் நண்பரே,இதயம் குமுறிய போதும்,தடுமாறி நிற்கின்ற போதும்,பரிவு காட்டி பாசம் செய்ய கைகள் இல்லாத போதும் "நம்பிக்கை" மட்டுமே என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாய் உணர்கிறேன்.அந்த நம்பிக்கையின் காலடி சத்தத்தை கேட்டே எங்கோ சென்றொக்கொண்டு இருக்கிறேன்.


கடைசியாக நீங்கள் என்னை மீண்டும் மன்னிக்க வேண்டும் அல்லது நான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும் ,நண்பரே என்று உங்களை அளித்ததற்காக!இது அனுதாபத்திற்க்காக அல்ல,அழுகையை தீர்க்க!


குறிப்பு:இந்த கடிதம் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினால் தயவுசெய்து இதை கிழித்து விடாதீர்கள்,குப்பைத் தொட்டியில் போடுங்கள் ஒருவேளை அந்த குப்பை அள்ளுபவனுக்கு இந்த வரிகள் புரியலாம் அல்லவா!



ஜூலை 27,2018                                                                                                                                                                                                                                                 வெற்று  இதயத்துடன்,
                                                                                                                                                                                                                                                                                   நான் 

  If not delivered Pls Resend To :
 God,Heaven.






கோவை.சரவண பிரகாஷ் 

Tuesday, 3 July 2018

வாழ்க்கையை கண்டுபிடிப்போம்!

                                   
                                               
நெடுநாட்களுக்குப்  பிறகு,என் சிந்தைதனை பூட்டி வைத்த எண்ணங்களை சிரச்சேதம் செய்து என் எழுத்தாணி அவைகளுக்காய்  கசிகிறது.கைப்பேசி காதலாலும்,கால நேரமற்ற உழைப்பாலும் அவர்களை,அவைகளை  நீங்கள் மறந்திருக்க கூடும்.எண்ணத்தின் பிம்பங்களை எழுத்தினில் வடித்து அவர்களை,மறந்துபோனவர்களை அல்லது மறுத்து போனவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்....

கடிகாரத்தை காணவில்லை,கைபேசியை காணவில்லை,காலனியை காணவில்லை என்று நெடுநாட்கள் தேடுகிறீர்களே,ஐயகோ வாழ்க்கையை தொலைத்து விட்டு ஒருநாளும் அதனை தேட முற்படாமல் இருப்பது தான் எத்தனை விந்தை...

"கவனித்தால்" என்ற வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் நிறைய சம்மந்தம் இருப்பதாய் மனசு சொல்கிறது.


உங்கள் அலுவலகத்தில் ஒரு நாள் உங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றல் என்ன செய்வீர்கள்.யாரும் உங்களை கண்டும் காணாது போனால்,எப்படி இருக்கும்.நாள் முழுக்க உங்களை நிராகரித்து பேசாமல் இருந்தால் உங்கள் மனக்குமுறல்களின் எண்ணங்கள் சிவந்து போகாதா?அப்படிதான் அவர்களுக்கும்...இதில் அவைகளும் அடங்கும்

இரவு தூங்கும் போதும்,காலை எழும் பொது நம் முதன் முதலில் பார்த்து பரவசப்படுகிற விசியம் செல்போன் /தான்.(காதலன்/காதலிக்கு கூட இரண்டாம் இடம் தான்).அங்கு கவனிக்க மறந்துபோனவைகள் கண்கள் பறிக்கும் சூரிய உதயமும்,சுட சுட காபியும்,இதமான காலை காற்றும்...

இந்த காலை பொழுதின் மயக்கத்தில் ,மன்னிக்கவும் செல்பேசியின் மயக்கத்தில் உலவிக்கொண்டிருக்கும் உங்களுக்கு,உங்கள்  வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் வீடற்ற,நாதியற்ற,தன் வாழ்வில் சூரிய ஒளியின் பிரகாசத்தையே கண்டிராத பிளாட்பாரத்தில் வாழும் ஏழை முதியவரின் மனநிலையினை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தினமும் அவரை நீங்கள் கடந்து போகும் போது கூட ஒன்றும் தெரிந்திருக்காது...

  பேருந்து பயணங்களில் தினமும் நீங்கள் காணும் உங்களுக்கு டிக்கெட் கொடுக்கும் நடத்துனரை புன்முறுவல் சிந்தி கவனித்தது உண்டா!

என்றேனும் ஒருநாள் உங்கள் கார் ஓட்டுனருக்கு "நன்றி" என்று மகிழ்ந்து கூறியதுண்டா!

சாலையைக்  கடக்க கஷ்டப்  படும் முதியவருக்கு உதவி செய்வதை பற்றி நினைத்திருக்கிறார்களா!

உங்களுக்கு கதவு திறந்து விடும் அலுவலகப்  பணியாளரை "சாப்பிட்டாயா?" என்று ஒரு வார்த்தையை ஒருநாளும் கேட்டிருக்கமாட்டீர்கள்.

அன்று அந்த சிக்னல் நிறுத்தத்தில் உங்கள் அருகில் இருந்த பச்சிளம் குழந்தை உங்களை பார்த்து சிரித்ததே,அதையும் கவனிக்க மறந்த கல் நெஞ்சத்தார் அநீரோ?

வாழ்க்கை என்பது உங்களை மட்டும் சார்ந்ததல்ல,உங்கள் வாழ்க்கை நாடகத்தில் பல காதாபாத்திரங்கள் இருக்கத்தான் செய்கிறது.

அலுவலக வேலை,அலைச்சல்,கோவம்,துரோகம்,வருத்தம்,ஏக்கம்,கவலை இவைகளால் நீங்கள் அவைகளை,அவர்களை கவனிக்காமல் இருந்திருக்கலாம்.உங்களுக்கு இப்போது வேண்டியதெல்லாம் ஓய்வு.உங்கள் வேலைப்  பணிகளில் இருந்து,உங்களைப்  பீடித்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து,உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் பயங்களில் இருந்து....ஓயாமல் சுழலும் உங்கள் கால்கள் கொஞ்சம் இளைப்பாறட்டும் என்கிறேன் நான்...ஒரு நாள் ஒரே நாள் மட்டும்..

அதிகாலை எழுந்து சாலையோரம் நடந்து பாருங்கள்.ரம்மியமான மேகங்கள்,சூரிய ஒளி,செடியில் இளைப்பாறும் பனித்துளி,உங்கள் வருகைக்காகவே காத்திருந்த பூக்கள் இதுவரை நீங்கள் கவனிக்க மறந்த எல்லாம் உங்களுக்கு புது உலகை அறிமுகப்படுத்தும்,காதலின் தோல்விகளோ,வலிகளின் எச்சங்களோ,கவலைகளின் சாயலோ அங்கு காணாமல் போகும்.எதிரில் வருகின்ற முகங்கள் எல்லாம் பழகிய முகங்களாகத்  தெரியும்.நெடுக புன்னகை பூக்களை வீசியும் பெற்றும் செல்வீர்கள்.இந்த உலகமே உங்களை நேசிப்பதாய் உணர்வீர்கள்.அன்பும்,அமைதியும் நிறைந்த உங்கள் மனதை முதன் முதலாய் நீங்கள் கவனிப்பீர்கள்!

முதியோர் இல்லங்களில் அன்போடு சேர்த்து காலை உணவையும் பகிர்ந்து கொள்ளுங்கள்."நன்றி" என்ற வார்த்தை உங்களுக்கு உரியதாக இருக்கட்டும்.

உங்கள் வீட்டு தோட்டக்காரரிடம் கொஞ்சம் கதை பேசுங்கள்,கதை கேளுங்கள்...

வீதிகளில் பிள்ளைகளோடு சேர்ந்து நீங்களும் கபடி விளையாடுங்கள்,குழந்தையாய் மாறிப்போங்கள்!

உங்கள் தொடக்கப்  பள்ளி ஆசிரியரிடம் சென்று ஆசி வாங்குங்கள்!

கல்லூரி நினைவுகளை மன ஆழத்தில் இருந்து மேல் எழுப்புங்கள்,சண்டை போட்டு அன்றில் இருந்து இன்று வரை பேசாமல் இருக்கும் நண்பனை அவன் இருக்கும் இடம் சென்று பார்த்து அன்பில் கரைந்து போங்கள் .

அலமாரியை திறந்து உங்கள் பழைய நாட்குறிப்பை தூசு தட்டி எடுங்கள்.நினைவுகளின் தாக்கத்தில் உன் கண்ணீர் துளிகள் காகிதத்தை நனைக்கும்.

பழைய காதலிக்கு வாழ்த்து செய்தி அனுப்புங்கள்.கண்ணுக்கு தெரியாதவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள்,கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு நாளும் உதவுங்கள்.

உங்கள் வலிகளுக்கான வழிகளை,பூட்ட பட்டக்  கதவுகளுக்கான சாவிகளை வாழ்க்கை உங்கள் அருகிலேயே வைத்திருக்கிறது.நீங்கள் தான் கவனிக்க மறந்து போனீர்கள்.

சில மெழுகுவர்த்திகள் அணைந்து இருக்கிறது என்று அலட்சியம் கொள்ளாதீர்கள்,நீங்கள் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்பதற்காய் அவை இருளில் இருக்கலாம்.வாழ்க்கை உங்களுக்கான தீர்வை ஒரு ஏழையிடமோ,முதியவரிடமோ,குழந்தையிடமோ,பழைய நண்பனிடமோ ஒளித்துவைத்திருக்கக்கூடும் இல்லையா ?

சின்ன சின்ன விசயங்களில் வாழ்க்கை நமக்கு பெரும் போதனைகளை கற்றுத் தரும்.நாம் காணும் எவரிடத்திலும் வாழ்வு நமக்கான பொக்கிஷத்தை கொடுத்துவைத்திருக்கும்.

தயவுசெய்து ஒரு நாள் மட்டுமாவது ஓடுவதை நிறுத்திவிட்டு நீங்கள் வாழுங்கள்!

வாழ்க்கை எல்லோரையும் தன்  இரு கரம் கொண்டு வாரி அணைத்து மகிழ்ச்சியை அள்ளித்தர தயாராக இருக்கிறது.வாழ்க்கை தரும் மகிழ்ச்சியை அனுபவிக்க நாம் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர்  பின்னப்பட்டிருக்கிறோம் என்பதை கவனிக்கும் போது வாழ்க்கை அமுதமாகிறது.

கவனிக்கப்படாதவைகளும்,கவனிக்கப்படாதவர்களும் கவனிக்கப்படும் போது வாழ்க்கையை கண்டுபிடிக்க முடியும்.

வாருங்கள்!வாழ்க்கையை கண்டுபிடிப்போம்!


கோவை.சரவண பிரகாஷ்
3/7/18