Friday, 27 July 2018

முகவரி தெரியாதவருக்கு ஒரு கடிதம்...!





அன்புள்ளவருக்கு,

              இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு நீங்கள் என்னை மன்னிக்க  வேண்டும்,காரணம் உங்களுக்கும்  அதன் அர்த்தம் புரியாமல் போயிருக்கலாம் அல்லது பிடிக்காமல் போயிருக்கலாம்.இந்த கடிதம் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருப்பதற்காக நான் பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்கிறேன்.உங்களை எனக்கு தெரியாமல் இருக்கலாம்,இந்த பூமி பந்தின் ஒரு ஓரத்தில் நீங்கள் யாரோ ஒருவராக இருக்கலாம்,ஆனாலும் காலத்தாலும்,உலகத்தாலும் கைவிடப்பட்ட மனிதனின் உணர்வுகளையும்,காயங்களையும் இந்த கடிதத்தின் வாயிலாக உங்கள் கண்களாவது படிக்கிறதே அதற்காக நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.எத்தனை ஆண்டுகளுக்குப்  பிறகு,எத்தனை இடர்களை கடந்து எப்போது இந்த கடிதம் உங்களை வந்தடைந்திருக்கிறது என்பதை நான் அறியேன்.ஒருவேளை இந்த கடிதத்தை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரம் நான் இந்த பூமியில் இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் நண்பரே சத்தியம் சொல்கிறேன்,எனது வரிகள் ஒருபோதும் மங்காதவைகள் ஏனென்றால் அவை என் உணர்வுகளின் பிம்பங்கள்.
                  இருபத்தெட்டு வயதாகிறது எனக்கு.படிப்பு,வேலை என்று சராசரி மனிதனுக்கு உண்டான சடங்குகள் யாவும் குறையின்றி நடந்து கொண்டு தான் இருந்தன.ஆனால் வாழ்க்கை சராசரியாக முடிந்து போக மனிதம் ஒன்று இயந்திரம் இல்லையே.வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருந்தது.ஆனால் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எனக்குள் ஒரு கவலை,சலனம்,ஏக்கம் எப்போதும் இருந்துகொண்டு இருந்தது.நான் நானாக இருக்க முயற்சி செய்தேன்.ஆனால் கடைசியில் என்னை அவர்கள் மாற்றிவிட்டார்கள்.வெளி இடங்களிலும்,பணி இடங்களிலும் ஒருவாறே இருப்பேன்.அதிக நேரங்களில் மௌனம் ஏன் இயங்க இருக்கும்.மனிதர்களின் மொழியை நான் பேசியபோதெல்லாம் எனக்கு கிடைத்தது அவமானமும்,உதாசீனமும்,சுடுசொல்ல்லும் தான்.அதனால் நான் பேசுவதே இல்லை அல்லது என் பேச்சை கேட்பதற்கென யாருமே எனக்காக இருந்ததில்லை.அன்பரே,இத்தனை நாட்களாய் என் இதயத்தின் ஆழத்தில் அடக்கி வைத்திருந்த அலைகளை வெளியேற்றுகிறேன்.நீங்கள் எப்போதுவது ஒரு தீவில் நடுப்பகுதியில் தண்ணீர் இன்றி தவித்ததுண்டா?கற்பனை செய்து பார்த்ததுண்டா.இருபத்திரண்டு ஆண்டுகளாக நானும் என் மனமும் பாலைவனத்தில் தான் இருக்கிறோம்,உடல் மட்டும் தான் பூவுலகில் நிலவுகிறது.இந்த வார்தைகளை எழுதும் போது என் இதயம் வெதுவெதுக்கிறது,கைகள் நடுங்குகிறது.தனிமை....தனிமை....தனிமை....!வற்றாத தனிமை என்னும் நதியின் சொந்தக்காரன் நான்.உலகத்தில் எல்லோருக்கும் யாராவது இருப்பதாக எனக்குள் ஒரு நம்பிக்கை,ஆனால் நான் என் எண்ணங்களை இறக்கி வைத்து இளைப்பாறத் தான் யாருமே இருந்ததில்லை.எழுத்தை தவிர...!சோகங்களை சொல்லி அழவும்,மன வலிகளுக்கு மருந்திடவும் ஒருவரைக் கூட நான் சம்பாதித்ததில்லை.அருமை நண்பரே,சிறு வயதில் இருந்தே இதுவரை நான் நேசித்த எதுவுமே எனக்கு கிடைத்ததாக நினைவில்லை.என்னை   நேசித்தவர் யாவரையும் நான் பதின்ம பருவத்தில் கண்டதில்லை.ஒருநாள் நான் கண்டுகொண்டேன் "அன்பு" அது தான்  உயிர்களும் மண்ணில் வாழ்வதற்கு காரணமாக இருக்கின்றது.அன்பு செய்ய கற்றுக்கொண்டேன்.அன்பினை அனைவர்க்கும் அள்ளி வழங்கினேன்.அன்பையே என் பன்பாக்கி கொண்டேன்.கொடுக்க கொடுக்க நான் பெற்றதெல்லாம் "வெறுமை" மட்டும் தான்.எதுவுமில்லாத வெறுமை,யவருமில்லாத தனிமை.அவர்கள் சொன்னார்கள் அன்பு எதனையும் எதிர்பார்க்காது,உண்மை தான் ஆனால் இதயம் குறைந்தபட்ச ஆறுதலை எதிர்பார்ப்பது தவறென்று எந்த தத்துவ புத்தகமும் சொன்னதாக எனக்கு நினைவில்லை.நான் குறைந்தபட்ச அன்பினை எதிர்பார்த்தேன்,பாசத்தோடு இதயத்தை வருடுகிற கன நேர மகிழ்ச்சியை எதிர்பார்த்தேன்,கண்ணீர் துடைக்கிற விரல்கள் ஒன்றாவது கிடைக்குமா என தேடினேன்,உயிர் கொடுத்தவர்களை தவிர அன்பினை உதிரம் ஆக்கி உயிர் கொடுப்பவர்கள் உண்டா என என்னையே நான் கேட்டேன்.விடையாய் வந்த நண்பர்கள் கண்ணீர் துளிகள் மட்டுமே!உங்களுக்கு ஒன்று தெரியுமா,என் ரணங்களையும்,கண்ணீரையும் முழுமையாக அறிந்தது என் தலையணை மட்டும் தான்.பாவம் இத்தனை வருடங்களாக இப்படி பட்ட மனிதனோடு இருந்ததற்கு அதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கலாம்.எத்தனையோ சூழ்நிலைகளில் வார்த்தைகளை உதட்டின் வழியாக வெளிநடப்பு செய்யமுடியாமலும்,உள்ளத்தின் உள்ளே அடக்க முடியாமலும் என் இதயம் குமுறிய குமுறல்களை விட எரிமலைகள் ஒன்றும் பெருசென எனக்கு தோன்றவில்லை.பல்லாயிரம் முறை உள்ளாரா நான் அழுதிருக்கிறேன் தெரியுமா..!

                             அநேக நேரங்களில் நான் கடல் அலை முன் நின்று கொண்டு நிலவினை பார்த்துக்கொண்டுஇருப்பேன்,அந்த நிலவும் நானும் ஒன்றென நினைப்பேன்.ஆனால் நிலவிற்கு கூட உடன் நட்சத்திரங்கள் பல இருக்கின்றனவே!என் தனிமை தீயில் என் மனம் எப்போதோ கருகிவிட்டது.என் கடுமையான அழுகை வேள்வியினால் கூட அதை காப்பாற்ற முடியவில்லை.அந்த தீயில் என் உணர்வுகளும் கொல்லப்பட்டு இருந்தால் வசதியாக இருந்திருக்கும்.இந்த அழுகையும் ஏக்கமும் என் பல இரவுகளை கொள்ளை அடித்திருக்கின்றன.இது இந்த வெண்ணிற இறவை போல.கொஞ்சம் நிறுத்தி விட்டு வார்த்தைகளை தொடர்கிறேன்,கண்ணீர்த்துளிகள் இந்த காகிதத்தையும் அழுக்காக்கி விட்டது.துடைத்துவிட்டு எழுதுகிறேன்.தாஸ்தோவ்ஸ்க்கியின் நாயகன் போலவே நான் கனவுலகில் வாழும் மனிதனாகவே இருக்கிறேன்.அவனை போலவே வெறுமையும்,தனிமையும் மட்டும் சூழ்ந்த மனிதனாக இருக்கிறேன்.அந்த நாயகனை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஒரு தனிமையாளனின் கண்ணீரின் மொழிகளை இன்னொரு தனிமையாளன் தானே உணர்ந்துகொள்ள முடியும்.எனக்குள் ஆயிரம் கேள்விகள் ஆனால் அவற்றிற்கு பதில் தரவும்,ஆறுதல் அளிக்கவும்,கண்ணீர் துடைக்கவும், ஒருவரும் இருந்ததில்லை,இருப்பதுமில்லை!இறைவனும் கூட கருணை கொண்டதில்லை.இதோ அந்த மோசமான பதில் தெரியாத இரவுகளை போல இந்த இரவும் கண்ணீரில் கரைந்து போகிறது.

ஆனாலும் நண்பரே,இதயம் குமுறிய போதும்,தடுமாறி நிற்கின்ற போதும்,பரிவு காட்டி பாசம் செய்ய கைகள் இல்லாத போதும் "நம்பிக்கை" மட்டுமே என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாய் உணர்கிறேன்.அந்த நம்பிக்கையின் காலடி சத்தத்தை கேட்டே எங்கோ சென்றொக்கொண்டு இருக்கிறேன்.


கடைசியாக நீங்கள் என்னை மீண்டும் மன்னிக்க வேண்டும் அல்லது நான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும் ,நண்பரே என்று உங்களை அளித்ததற்காக!இது அனுதாபத்திற்க்காக அல்ல,அழுகையை தீர்க்க!


குறிப்பு:இந்த கடிதம் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினால் தயவுசெய்து இதை கிழித்து விடாதீர்கள்,குப்பைத் தொட்டியில் போடுங்கள் ஒருவேளை அந்த குப்பை அள்ளுபவனுக்கு இந்த வரிகள் புரியலாம் அல்லவா!



ஜூலை 27,2018                                                                                                                                                                                                                                                 வெற்று  இதயத்துடன்,
                                                                                                                                                                                                                                                                                   நான் 

  If not delivered Pls Resend To :
 God,Heaven.






கோவை.சரவண பிரகாஷ் 

Tuesday, 3 July 2018

வாழ்க்கையை கண்டுபிடிப்போம்!

                                   
                                               
நெடுநாட்களுக்குப்  பிறகு,என் சிந்தைதனை பூட்டி வைத்த எண்ணங்களை சிரச்சேதம் செய்து என் எழுத்தாணி அவைகளுக்காய்  கசிகிறது.கைப்பேசி காதலாலும்,கால நேரமற்ற உழைப்பாலும் அவர்களை,அவைகளை  நீங்கள் மறந்திருக்க கூடும்.எண்ணத்தின் பிம்பங்களை எழுத்தினில் வடித்து அவர்களை,மறந்துபோனவர்களை அல்லது மறுத்து போனவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்....

கடிகாரத்தை காணவில்லை,கைபேசியை காணவில்லை,காலனியை காணவில்லை என்று நெடுநாட்கள் தேடுகிறீர்களே,ஐயகோ வாழ்க்கையை தொலைத்து விட்டு ஒருநாளும் அதனை தேட முற்படாமல் இருப்பது தான் எத்தனை விந்தை...

"கவனித்தால்" என்ற வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் நிறைய சம்மந்தம் இருப்பதாய் மனசு சொல்கிறது.


உங்கள் அலுவலகத்தில் ஒரு நாள் உங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றல் என்ன செய்வீர்கள்.யாரும் உங்களை கண்டும் காணாது போனால்,எப்படி இருக்கும்.நாள் முழுக்க உங்களை நிராகரித்து பேசாமல் இருந்தால் உங்கள் மனக்குமுறல்களின் எண்ணங்கள் சிவந்து போகாதா?அப்படிதான் அவர்களுக்கும்...இதில் அவைகளும் அடங்கும்

இரவு தூங்கும் போதும்,காலை எழும் பொது நம் முதன் முதலில் பார்த்து பரவசப்படுகிற விசியம் செல்போன் /தான்.(காதலன்/காதலிக்கு கூட இரண்டாம் இடம் தான்).அங்கு கவனிக்க மறந்துபோனவைகள் கண்கள் பறிக்கும் சூரிய உதயமும்,சுட சுட காபியும்,இதமான காலை காற்றும்...

இந்த காலை பொழுதின் மயக்கத்தில் ,மன்னிக்கவும் செல்பேசியின் மயக்கத்தில் உலவிக்கொண்டிருக்கும் உங்களுக்கு,உங்கள்  வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் வீடற்ற,நாதியற்ற,தன் வாழ்வில் சூரிய ஒளியின் பிரகாசத்தையே கண்டிராத பிளாட்பாரத்தில் வாழும் ஏழை முதியவரின் மனநிலையினை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தினமும் அவரை நீங்கள் கடந்து போகும் போது கூட ஒன்றும் தெரிந்திருக்காது...

  பேருந்து பயணங்களில் தினமும் நீங்கள் காணும் உங்களுக்கு டிக்கெட் கொடுக்கும் நடத்துனரை புன்முறுவல் சிந்தி கவனித்தது உண்டா!

என்றேனும் ஒருநாள் உங்கள் கார் ஓட்டுனருக்கு "நன்றி" என்று மகிழ்ந்து கூறியதுண்டா!

சாலையைக்  கடக்க கஷ்டப்  படும் முதியவருக்கு உதவி செய்வதை பற்றி நினைத்திருக்கிறார்களா!

உங்களுக்கு கதவு திறந்து விடும் அலுவலகப்  பணியாளரை "சாப்பிட்டாயா?" என்று ஒரு வார்த்தையை ஒருநாளும் கேட்டிருக்கமாட்டீர்கள்.

அன்று அந்த சிக்னல் நிறுத்தத்தில் உங்கள் அருகில் இருந்த பச்சிளம் குழந்தை உங்களை பார்த்து சிரித்ததே,அதையும் கவனிக்க மறந்த கல் நெஞ்சத்தார் அநீரோ?

வாழ்க்கை என்பது உங்களை மட்டும் சார்ந்ததல்ல,உங்கள் வாழ்க்கை நாடகத்தில் பல காதாபாத்திரங்கள் இருக்கத்தான் செய்கிறது.

அலுவலக வேலை,அலைச்சல்,கோவம்,துரோகம்,வருத்தம்,ஏக்கம்,கவலை இவைகளால் நீங்கள் அவைகளை,அவர்களை கவனிக்காமல் இருந்திருக்கலாம்.உங்களுக்கு இப்போது வேண்டியதெல்லாம் ஓய்வு.உங்கள் வேலைப்  பணிகளில் இருந்து,உங்களைப்  பீடித்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து,உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் பயங்களில் இருந்து....ஓயாமல் சுழலும் உங்கள் கால்கள் கொஞ்சம் இளைப்பாறட்டும் என்கிறேன் நான்...ஒரு நாள் ஒரே நாள் மட்டும்..

அதிகாலை எழுந்து சாலையோரம் நடந்து பாருங்கள்.ரம்மியமான மேகங்கள்,சூரிய ஒளி,செடியில் இளைப்பாறும் பனித்துளி,உங்கள் வருகைக்காகவே காத்திருந்த பூக்கள் இதுவரை நீங்கள் கவனிக்க மறந்த எல்லாம் உங்களுக்கு புது உலகை அறிமுகப்படுத்தும்,காதலின் தோல்விகளோ,வலிகளின் எச்சங்களோ,கவலைகளின் சாயலோ அங்கு காணாமல் போகும்.எதிரில் வருகின்ற முகங்கள் எல்லாம் பழகிய முகங்களாகத்  தெரியும்.நெடுக புன்னகை பூக்களை வீசியும் பெற்றும் செல்வீர்கள்.இந்த உலகமே உங்களை நேசிப்பதாய் உணர்வீர்கள்.அன்பும்,அமைதியும் நிறைந்த உங்கள் மனதை முதன் முதலாய் நீங்கள் கவனிப்பீர்கள்!

முதியோர் இல்லங்களில் அன்போடு சேர்த்து காலை உணவையும் பகிர்ந்து கொள்ளுங்கள்."நன்றி" என்ற வார்த்தை உங்களுக்கு உரியதாக இருக்கட்டும்.

உங்கள் வீட்டு தோட்டக்காரரிடம் கொஞ்சம் கதை பேசுங்கள்,கதை கேளுங்கள்...

வீதிகளில் பிள்ளைகளோடு சேர்ந்து நீங்களும் கபடி விளையாடுங்கள்,குழந்தையாய் மாறிப்போங்கள்!

உங்கள் தொடக்கப்  பள்ளி ஆசிரியரிடம் சென்று ஆசி வாங்குங்கள்!

கல்லூரி நினைவுகளை மன ஆழத்தில் இருந்து மேல் எழுப்புங்கள்,சண்டை போட்டு அன்றில் இருந்து இன்று வரை பேசாமல் இருக்கும் நண்பனை அவன் இருக்கும் இடம் சென்று பார்த்து அன்பில் கரைந்து போங்கள் .

அலமாரியை திறந்து உங்கள் பழைய நாட்குறிப்பை தூசு தட்டி எடுங்கள்.நினைவுகளின் தாக்கத்தில் உன் கண்ணீர் துளிகள் காகிதத்தை நனைக்கும்.

பழைய காதலிக்கு வாழ்த்து செய்தி அனுப்புங்கள்.கண்ணுக்கு தெரியாதவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள்,கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு நாளும் உதவுங்கள்.

உங்கள் வலிகளுக்கான வழிகளை,பூட்ட பட்டக்  கதவுகளுக்கான சாவிகளை வாழ்க்கை உங்கள் அருகிலேயே வைத்திருக்கிறது.நீங்கள் தான் கவனிக்க மறந்து போனீர்கள்.

சில மெழுகுவர்த்திகள் அணைந்து இருக்கிறது என்று அலட்சியம் கொள்ளாதீர்கள்,நீங்கள் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்பதற்காய் அவை இருளில் இருக்கலாம்.வாழ்க்கை உங்களுக்கான தீர்வை ஒரு ஏழையிடமோ,முதியவரிடமோ,குழந்தையிடமோ,பழைய நண்பனிடமோ ஒளித்துவைத்திருக்கக்கூடும் இல்லையா ?

சின்ன சின்ன விசயங்களில் வாழ்க்கை நமக்கு பெரும் போதனைகளை கற்றுத் தரும்.நாம் காணும் எவரிடத்திலும் வாழ்வு நமக்கான பொக்கிஷத்தை கொடுத்துவைத்திருக்கும்.

தயவுசெய்து ஒரு நாள் மட்டுமாவது ஓடுவதை நிறுத்திவிட்டு நீங்கள் வாழுங்கள்!

வாழ்க்கை எல்லோரையும் தன்  இரு கரம் கொண்டு வாரி அணைத்து மகிழ்ச்சியை அள்ளித்தர தயாராக இருக்கிறது.வாழ்க்கை தரும் மகிழ்ச்சியை அனுபவிக்க நாம் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர்  பின்னப்பட்டிருக்கிறோம் என்பதை கவனிக்கும் போது வாழ்க்கை அமுதமாகிறது.

கவனிக்கப்படாதவைகளும்,கவனிக்கப்படாதவர்களும் கவனிக்கப்படும் போது வாழ்க்கையை கண்டுபிடிக்க முடியும்.

வாருங்கள்!வாழ்க்கையை கண்டுபிடிப்போம்!


கோவை.சரவண பிரகாஷ்
3/7/18

Monday, 17 July 2017

மனமே நீ கண்ணுறங்கு..!


(காயங்களால் சூழப்பட்ட இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கத்தில் என் பேனா சிந்திய முத்துகளை உங்கள் முன் தொடுக்கிறேன்) 


ஆராரோ பாட யாருமில்லாது, பொழுதெல்லாம் 
கதறி அழுகின்ற ஊமை உள்ளத்திற்கு என் 
தங்க வரிகளால் தாலாலோ பாடுகிறேன் 
மனமே நீ கண்ணுறங்கு....! 

பயப்படாதே!காயங்கள் மட்டுமே அறிந்த உன் 
இதயத்தை பிழிந்தெடுத்து குருதிகுடிக்கும் 
பொய்யுருவில் வருகின்ற சில 
அகோரிகளின் எச்சம் நானல்ல...! 

சில நூறு அறுவை சிகிச்சை 
செய்த இதயத்திற்கு வார்த்தைகளால் 
தையலிட முற்படுகிறேன்...! 


நீ உலகத்தின் விசித்திரம் -நீ 
உண்டாக்கிய கண்ணீர் வெள்ளத்தில் 
நீயே அடித்துச் செல்லப்படுகிறாய்....! 


உன் உண்மை கண்ணீரையும் பொய் 
சிரிப்பையும் இதுவரையில் உணர்ந்தோர் 
ஒன்றோ இரண்டோ இருக்கலாம்..! 

பூதங்கள் தேவையில்லை பயமுறுத்த காரணம் 
இது ப்ருடஸ்கள் நிறைந்த உலகமடா..! 

ஒரு நிமிடம் என் எழுத்தாணி 
உனக்காக கண்ணீர் சிந்துகிறது...! 

கவலை காட்டில் தொலைந்து போகாதே! 
எழு ,கண்ணீர் துடை,உற்சாகம் கொள்..! 
சோகம் மறந்து லட்சியம் கைகொள்...! 


இருட்டு உலகத்தின் குருட்டு விழிகள் 
உன் உணர்வுகளை 
நெகிழிப் பந்துகளாக்கினாலென்ன,நீ 
நெகிழா நெஞ்சு கொள்..! 


நிராகரிப்புகளுக்காக நீ 
நிர்மூலமாகலாமா? 
உந்தியேலும் ஆற்றல் கொள்..! 

இடைவெளி இல்லா இரட்டை பிரசவம் 
போல வேதனையும்,தோல்விகளும் 
உனக்கு கண்ணாமூச்சி காட்டினாலென்னா, 
மனமே நீ துயரமறந்து கண்ணுறங்கு..! 

மண்தோடும் மா மரக்கிளைகள் 
கலங்குவதில்லை,மதி கொண்ட 
மானுட மனமே,அமைதியாய் 
நீயும் கண்ணுறங்கு....! 

நினைத்து எல்லாம் நிஜமாகும் 
இனி நித்தமும் நமக்கொரு வரமாகும் 
நம்பிக்கை பூக்கள் உதிரா வரை 
நாளைகள் எல்லாம் நமதாகும்...! 

நடப்பவை எல்லாம் இனிதாகும் மனமே 
நலமாய் நீ கண்ணுறங்கு, 
மனமே நீ கண்ணுறங்கு....! 


கோவை.சரவண பிரகாஷ்.

Wednesday, 5 July 2017

கலங்காதிரு நன்னெஞ்சே!

                                                      கலங்காதிரு நன்னெஞ்சே!
                                                *********************************************************************

சொல்லி அழ யாருமின்றி,உன் வார்த்தைகள் தவித்தாலும்
யாருமில்லா தனிமை உன்னை விட்டு விலக மறுத்தாலும்
இன்னும் நீ கடக்க வேண்டிய தூரம் நின் கண்ணெதிரே  உண்டு
அதுவரை கலங்காதிரு நன்னெஞ்சே...!

உற்றார்,உறவினர் யார் தடுத்தாலும்,உயிராய் நினைத்த
நண்பர்கள் உன்னை பிரிந்தாலும்,சோக காட்டில் உன்
சுவடுகள் பதிந்தாலும்,சரித்திர நாயகன் நீயென
உலகம் பேசும்வரை கலங்காதிரு நன்னெஞ்சே....!

வற்றாத கவலை கடலலைகள்  உன் மனபிரேதேசத்தில் சூழ்ந்தாலும்
துரோகம்,சூழ்ச்சி,கயமை இவைகளால் நீ சூழப்பட்டாலும்
நாளெல்லாம்  கண்ணீரில் நீ கரைந்து போனாலும்,கடமைகள்
காத்திருக்கிறது அதற்காகவேனும் கலங்காதிரு நன்னெஞ்சே...!


எத்தனை நாக்குகள் உன்னை கீறிச்சென்றாலும்,உன்னவரே
உன்னை நிந்தனை செய்தாலும்,அணையாத சோகத் தீ
உன்னை கொஞ்சம் கொஞ்சமா சுட்டெரித்தாலும்,உந்தன் புகழொளி
ஒருநாள் சுடர்விட்டெரியும்,அதுவரையில் கலங்காதிரு நன்னெஞ்சே...!

புரிந்தவர்கள் பிரிந்து சென்றாலும்,பிரிந்தவர்கள் புரிந்து கொன்றாலும்
உனக்குரியவர்களே உன் உயிர் பிழிந்தாலும்,நினைவுகளால் நித்தம் நீ
கைதாகிறபோதும்,புது விடியல் ஒன்று உனக்காய் காத்திருக்கும்
அதுவரையேனும் நீ கலங்காதிரு நன்னெஞ்சே.....!



கோவை.சரவண பிரகாஷ்.

Saturday, 10 June 2017

அந்த ஒரு சொல்!

 
                                                                 
நான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம்.உமா என்ற ஆசிரியரை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஹிந்தி ஆசிரியர் எல்லோரும் அவரை உமாஜி என்று அழைப்போம்.அருமையாக ஹிந்தி சொல்லி தருவார்.அதனாலே எனக்கு ஹிந்தி மீது ஆர்வம் ஏற்பட்டது.

ஒருநாள் வகுப்பிற்கு வந்தார்.அன்று என்ன பாடம் எடுக்க போகிறார் என்று எல்லோரும் ஆவலாய் காத்திருந்தோம்.உமாஜி இன்று பாடம் எதுவும் எடுக்கப்போவதில்லை என்றும் முக்கியமான அறிவுரைகள் வழங்க போவதாகவும் சொன்னார்கள்.எங்களுள் சிலர் செவிகளை கூர்மையாக்கி கொண்டோம்.பலர் இமைகள் மூடி தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

அன்று அவர் குமுளி(bubble gum) எடுத்து கொள்வதால் என்னென்ன தீமைகள் இருக்கிறது.அது உடலிற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எடுத்து சொன்னார்.காரணம்,உமாஜி வருகின்ற வழியில்  அப்போது பல மாணவர்கள் குமுளியை ஊதிக்கொண்டிருந்தார்களாம். அரை மணிநேரம் அதனை பற்றி தெளிவாக பேசினார்.

துரித உணவுகள் உண்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.நான் ஆழமாக கேட்டுக்கொண்டிருந்தேன்(பாடத்தை கூட இது வரை அப்படி கவனித்து இல்லை).மெல்ல மெல்ல என் எண்ணம் விரிந்தது.நான் அடிக்கடி குமுளி பயன்படுத்துபவன்.தினமும் நண்பர்களோடு சேர்ந்து குமுளி இடுவேன்.எனக்கு பிடித்த ஆசிரியர் அறிவுறுத்தியத்திலிருந்து இன்று வரை நான் குமிழி பயன்படுத்துவதே இல்லை.பலசமயம் நண்பர்கள் வற்புறுத்தியும் நான் ஏற்க வில்லை.

அவர் பேசி 8 ஆண்டுகள் இருக்கும்.இன்னும் என் நினைவில் இருக்கிறது.அவர் சொற்படியே நடந்து வருகிறேன்,என் வாழ்வின் எஞ்சிய பகுதிகளும் ஒருபோதும் குமுளி பயன்படுத்தமாட்டேன் என மனதார சபதம் எடுத்துள்ளேன்.துரித உணவுகளை தான் அவ்வளவு சீக்கிரமாக விடமுடியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறேன்.அந்த ஆசிரியர் எனக்கு பிடித்தவர் என்பதால் நான் அவர் அறிவுரையை கேட்கவில்லை.எனக்கு பிடித்தார் போல அன்று அவர் பேசியதால் தான் இன்று நான் பல தீயபழக்கங்களை கைவிட்டுள்ளேன்.


கோவை.சரவண பிரகாஷ்.

ஆசிரியர்களுக்கு ஒரு மாணவனின் கடிதம்!


மதிற்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு, 

உங்களால் பேரறிவோடு விளங்கும் ஒருவன்,நீங்கள் ஒளியேற்றி வைத்த அனல் விளக்கான ஒருவன் மிகுந்த மரியாதையோடும்,பரந்து விரிந்த மனதோடும் மாணவ சமுதாயத்தின் பிரதிநிதியாய் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 

நாளைய இந்தியாவின் எதிர்காலம் எங்களது கைகளில்,ஆனால் எங்களது எதிர்காலம் உங்களுடைய காலடியில் இருக்கிறது. 

வாழும் தெய்வங்களே!எங்கள் முன்னேற்றத்திற்கு ஏணிப்படிகளாய் இருப்பவர்களே,உங்கள் கரங்களை படிகளாக்கி அல்லவா நாங்கள் மேலுயர்ந்தோம்.இந்த சமுதாயத்தில் உன்னிப்பாக கவனிக்க படவேண்டியவர்கள் நீங்கள்!நிர்வாணத்தை மறைக்க நெசவு நெய்ந்த தொழிலாளர்களுக்கு இந்த சமுதாயம் தந்தது சவத்துணி தான் என்பது போல எங்கள் அறியாமையை அழித்து அறிவொளி அளிக்கும் உங்களை சமுதாயம் இன்னும் சிம்மாசனத்தில் ஏற்றவில்லை. 

மாணாக்கர்களின் வெற்றியில் வெற்றி அடைபவர்கள் நீங்கள்.பொறாமை கொள்ளாத ஒரே ஜீவன் நீங்கள்.பெற்றெடுத்த தாய் கூட பத்து மாதங்கள் தான் எம்மை வயிற்றில் சுமந்தாள்,ஆனால் பள்ளியில் பதினான்கு ஆண்டுகளும் கல்லூரியில் நான்காண்டுகளுமாக ஏறத்தாழ 18 ஆண்டுகள் எங்களுக்காக ஓடி ஓடி உங்கள் கால்கள் தேய்ந்திருக்குமே! 

நாங்கள் பொறுப்பான பதவியில் அமர வேண்டும் என்பதற்காய் காலமெல்லாம் நின்றுகொண்டே இருப்பவர்களே!உலகத்தின் கண்களுக்கு ஒளி மட்டுமே தெரியும்,ஏற்றிவைத்தவர்களை அது கணக்கில் வைத்துக்கொள்வதில்லை.இன்று பிரகாசமாக ஒளிவீசும் எங்களை ஏற்றி வைத்து தீக்குச்சிகளாய் கரைந்து போவார்கள் நீங்கள். 

இன்று வெற்றி மேடையை அலங்கரிக்கிற எல்லோரது பேச்சிலும் அவரது ஆசிரியர் பெயர் நிச்சயம் அடிபடும்.ஆனால் அந்த வேளையில் அந்த ஆசிரியர் அங்கிருக்கமாட்டார் அடுத்த படைப்பை உருவாக்குவதில் உழைத்து கொண்டிருப்பார். 

வெற்றியின் விலாசத்தை அடைந்த எல்லோர் வாழ்விலும் அவர்களை தட்டி கொடுத்த ஓர் ஆசிரியர் இருக்கிறார்.இன்று எங்கள் கிளைகள் கொஞ்சம் விரிந்திருக்கலாம் ஆனால் ஆசான்களே எங்கள் வேர்கள் வசிப்பது உங்களிடத்தில் தான். 

புதிய இந்தியாவின் பிரம்மாக்களே!காலப் பெருவெளியில் நம் சிலவற்றை மறந்து விட்டோம் அல்லது தொலைத்து விட்டோம்.உங்களுக்கும் எங்களுக்கமான உறவை புதுப்பித்து கொள்ள வேண்டிய சூழலில் காலத்தால் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.மிகுந்த பணிவோடு உங்களிடத்தில் நான் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.பிழையொன்றும் இல்லையேல் உரைக்கிறேன் தயைகூர்ந்து கேட்டருள்க! 

இந்தியாவில் கல்வியின் தரம் ஒருவேளை குறைந்திருக்கலாம்.ஆனால் நாளைய நாட்டின் தூண்களுக்கு குறை ஒன்றும் இருக்க கூடாது.இந்த கல்வி முறை 3 ஆண்டுகள் மூச்சுப்பிடித்து எப்படி ஒரு ஆற்றை கடக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லி தருகின்றன.வாழ்க்கையிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என தற்காலிக தீர்வுகளை சொல்லி தரும் பாடபுத்தகங்களே பெருகி உள்ளன.கல்வி என்பது வாழ்க்கையை எப்படி ஜெயிக்கலாம் என்ற தாரக மந்திரத்தை சொல்லி தருவது.தன்னம்பிக்கை கற்று தருவது.தனித்திறனை வெளிப்படுத்துவது.சுயமாக சிந்திக்க கற்று தருவது. 

நாம் நாட்டின் இன்றைய கல்வி முறையில் எங்களுக்கு 100 சதவீத உடன்பாடு இல்லை.அக்குறையை கூட 
ஆசிரிய பெருமக்களே உங்களால் மாற்ற முடியும்.கணிதம்,பொறியியல்,வேதியல் இவற்றை மட்டுமே போதிப்பது ஆசிரியருடைய வேலை.அவற்றில் இருந்து இரண்டு நிமிடம் விலகி நின்று வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவது குருவினுடைய வேலை.நீங்கள் நல்ல ஆசிரியர்களாக இருக்கவில்லையென்றாலும் பரவாயில்லை தயவு செய்து ஒரு குருவாக இருங்கள்.ஏட்டு கல்வியோடு சேர்த்து ஒவ்வொரு கல்விநிலையங்களிலும் மறந்து போன வாழ்க்கை கல்வியை போதியுங்கள்.காலத்தால் இயந்திரமாக்கப்பட்ட நாங்கள் சில நிமிடங்களாவது மனிதர்கள் ஆவோம்.வஞ்சகம்மிக்க அறிஞனாக இருப்பதை காட்டிலும் அறிவற்ற ஒழுக்கமிக்கவனாக இருப்பதும் ஒருவகையில் சிறந்ததே. 

எங்களோடு மனதோடு மனம் விட்டு பேசுங்கள்.எங்களின் எண்ணங்கள் எல்லாம் உங்கள் சிந்தையில் குடியேறும்.முதலில் எங்கள் மன அழுக்குகளை போக்குங்கள்.எங்கள் மனம் என்னும் களர் நிலத்தை பண்படுத்துங்கள்.பிறகு அறிவை புகுத்துங்கள். 

குருட்டு உலகத்தால் நிராகரிக்கப்பட்ட,வேதனைகள் கண்ட,தாழ்வு மனப்பான்மை மிக்க எத்தனையோ மாணவர்களுக்கு தம் ஆசான்களின் கைகள் அல்லவா ஏணிப்படிகள்.இந்த கல்விமுறை பிகாசோவை சச்சின் ஆக்கவும் ,சச்சினை மில்டன் ஆக்கவும் ,மில்டனை காலம் ஆக்கவும் முயற்சித்து கொண்டிருக்கிறது.நீங்களும் அதற்கு துணைபோகாதீர்கள்.எங்களின் எதிர்காலத்தை உதடுகளால் உச்சரிக்கும் நீங்கள் தான் எங்கள் உண்மை நிலையை எங்களுக்கே அறிமுக படுத்தி அத்திறமையை ஊக்குவிக்க வேண்டிய மிக பெரிய பொறுப்பும் உங்களிடத்தில் ஒப்படைக்க பட்டிருக்கிறது.எத்தனை ஆயிரம் திறமைகள் மண்ணோடு புதைந்திருக்கும்,அத்திறமைகளுக்கு நீரூற்றி வளர்க்க வேண்டியவர்கள் நீங்கள்.தயவு செய்து நீங்கள் உங்களிடத்தில் உள்ள காலமையும் ,மில்டனையும்,சச்சினையும் அடையாளம் கண்டுகொண்டு ஊக்குவியுங்கள். 

உங்கள் கைக்குள் நாங்கள் இருக்கிறோம்.அதிகம் அழுத்ததிர்கள் உடைந்து விடுவோம்.லேசாக விடாதீர்கள் நழுவி விடுவோம்.எங்களை வளைக்கிற அவசரத்தில் உடைத்து உடைத்தீர்கள்.எங்கள் கனவுகளுக்கு உயிர் கொடுக்க வேண்டியவர்கள் நீங்கள்,சேதப்படுத்திவிடாதீர்கள்! 

உங்கள் சொற்கள் தான் எங்களுக்கு வேதமந்திரம்.அச்சொற்கள் எங்கள் தாழ்வு மனப்பான்மையை நீக்க வேண்டும்.அச்ச்சொற்கள் கோழையையும் மாவீரனாக வேண்டும். ஒருபோதும் எங்களை தாழ்த்தி விட கூடாது.களிமண்ணை களிமண் என்று சொல்லிக்கொண்டிருப்பது உங்களை போன்ற பிரம்மக்களுக்கு அழகல்ல,அக்களிமண்ணையும் அழகிய சிற்பமாக வடிப்பதில் தான் உங்கள் கைவண்ணம் ஒளிந்திருக்கிறது. 
உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது நம்பிக்கையும்,உத்வேகமும்,வழிகாட்டுதலும் மட்டும் தான். 

பெரியயோர்களே!உங்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் பல சமயம் பொய்த்து போகசெய்திருக்கலாம்.அத்தனையும் மன்னித்து மறைக்கின்ற தாய் உள்ளம் கொண்டவர்கள் நீங்கள்.உங்கள் மாணவர்கள் எப்போது உங்களிடம் மனம் விட்டு பேசுகிறார்களோ அப்போது நீங்கள் உங்கள் பணியில் கால்வாசி ஜெய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். 

நீங்கள் கலங்கரை விளக்கமாக கூட மாறவேண்டும் கரை கிட்டத்தில் தான் என உற்சாகப்படுத்துங்கள் போதும்..! 

எங்களை மகான் ஆக்குவதற்கு முன் நல்ல மனிதனாகுங்கள் போதும்..! 

உங்கள் மீது ஆயிரம் கோடி நம்பிக்கைகளோடும்,வண்ணமயமான எதிர்கால கனவுகளோடும் வார்த்தைகளுக்கு முற்று புள்ளி வைக்கிறேன்,உங்கள் வார்த்தைகள் எங்கள் எதிர்கால வாழ்வின் தொடக்கமாக இருக்கும் என்ற எண்ணத்தில்....! 



-இப்படிக்கு 
உங்களால் உருவாகும் மாணவன். 

Monday, 5 June 2017

அவள் கொடுத்த முத்தம்!

                   

வெறுமை..நீண்ட காலமாய் மழையையே அறிந்திராத ஒரு பாலைவனம் போல் மனசெல்லாம் வெறுமை.நீண்ட நெடிய போராட்டங்களில் வெற்றி பெற்ற பிறகு ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கண்ணுக்கு தெரியாத,உணரமுடியாத ஒன்று என் மனதை ஆக்கிரமித்தது..!

துக்கம் முடிந்த வேளையில் கூட தூக்கம் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.விருக்கென எழுந்தேன்.பழையவற்றை அசைபோட்டேன்.

பெரும் வெற்றிகளை தருவதற்கு முன்னால் வாழ்கை சில பயிற்சி வகுப்புகள் எடுக்குமே அந்த சமயம் அது.ஒரு செயல் என்னால் முற்றுபெறவேண்டிய சூழல்.அந்த வேளை  அந்த வேலை  எனக்கு என்னிலும் மிக உயர்ந்ததாகத்தான் தெரிந்தது.பிரமித்து போனேன்!

என்னை பார்த்து உலகம் சிரித்தது.சாக்கடை எப்படி சாமி ஆகும் என சொல் விளையாட்டு ஆடியது.என்னை கைபந்துகள் ஆக்கி கீழே போட்டு உருட்டியது.

வாழத்தெரியாதவன் என வசை பாடியது,உன்னால் முடியுமோ என அய்யப்பட்டது!

என் "சா" தனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காய் புது சாதனை படைக்க வேண்டும் என எண்ணத்தில் குறித்துவைத்தேன்.

இரவுகளை பகலாக்கி ,பகல்களை இரவுகளாக்கி உழைத்தேன்.கொஞ்ச காலம் பசி தூக்கம் மறந்தேன்.

பட்டினி கிடந்தேன்,லட்சிய பசிக்கு யாரும் உணவிடாத காரணத்தால்.

மெல்ல மெல்ல ஐயம் தெளிந்தேன்,நிதானம் காத்தேன்.மெல்ல மெல்ல விரும்பிய செயல் கைகூடியது.வெற்றி கனி பறித்தேன் .

தேன் போல இன்பங்கள் திளைத்தது.வசை பாடிய உள்ளமெல்லாம் வாழ்த்தியது.இதயத்தை பெருமை ஆக்கிரமித்தது.

சொல்லிலடங்கா பாராட்டுக்கள்,என்னன்ற வாழ்த்துக்கள்,மலையென பரிசுகள்.உற்றார் உறவினர் ஒரு புறம்.சுற்றமும் நட்பும் ஒரு பெரும்.

ஆனாலும் என் இதயம் தனக்குரிய எதோ ஒன்றை தொலைத்துவிட்டதை போல் ஓர் உணர்வு அல்லது பிம்பம்.

தனிமையின் கரம் பிடித்தேன்.இப்போது இந்த தனிமை எனக்கு கசப்பாக இல்லை.காரணம் தனிமையின் கரம்  எனக்கு தேவைப்பட்டது.

கேள்வியே இல்லாத ஒன்றிக்காக விடை தேடும் பயணத்தை தொடர்ந்தேன்.என் பாதை எதுவென்று தெரியாமல் எதிர்ப்பாதையில் நடந்தேன்.எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாததை போல் ஒரு எண்ணம்.

நடந்து நடந்து கால்களும் தேய்ந்தது,அந்தியும் சாய்ந்தது.அது பூங்கா.மாலை மயக்கத்தில் யாருமற்ற பூங்கா.எனக்கான   சிம்மாசனமாய் பச்சை நிற இருக்கை.அமர்ந்தேன்.தனிமையின் ராஜனனேன்.என் எண்ணக்குதிரைகளை லாடங்கள் இல்லாமல் அவிழ்த்து விட்டேன்.அந்த மண்ணில் விட்டு விட்டு மழை பெய்தது.என் கண்ணீர்த்துளிகள்!

மனமெங்கும் குழப்பம்,வாடிய முகத்தோடு சிந்தனையில் ஆழ்ந்தேன்.திடுமென்று ஒருத்தி அருகில் வந்தமரந்தால்.சில வினாடிகளுக்கு பிறகு தான் என் கண்கள் அவளை படம் பிடித்தது.
என்ன சோகம் என்று வினவினாள்,என்ன சொல்லுவேன் எது சொல்லுவேன் காரணம் ஏதும் அறிகிலேன்.சொற்கள் வெளிநடப்பு செய்யதது.எங்கள் இருவருக்கும் இடையில் மௌனம் காவங்கு அரசாங்கம் நடத்தியது.

அன்பினால் வாழ்வபவள் போலும்.அன்பான பார்வையால் என் உள்ளத்திற்குள் ஒரு அங்குலம் நுழைந்தாள்.என் தடை பிடித்து தூக்கினாள் அப்போது தான் எழுந்தேன்.தலையை மெல்ல வருடி கொடுத்தால்.உள்ளம் உறைந்து போனேன்.என் குழப்ப  எண்ணங்கள் ஒவ்வொன்றும் அந்த வருடல்களில் சுடப்படுவதாய் எனக்குள் ஒரு ஆனந்தம்.கண்மூடி ரசித்தேன்.வருடியவள் கொஞ்சம் அருகில் வந்து நெற்றிப்பொட்டில் முத்தமிட்டாள்.கண்முடி திறப்பதற்குள் இறைவனை போல சட்டென்று மறைந்தாள்.

அவள் பேசிய மௌன மொழியை இப்பொது தான் வாழ்க்கை எனக்கு மொழிபெயர்த்து தந்தது.யாரென்ற தெரியாத அவள் என்னிடம் அன்பு மொழி பேசினாள்.கோடிகள் கொட்டி கொடுத்தாலும் வாங்க முடியாத மகிழ்ச்சி என்னுள்.சோக எண்ணங்கள் எல்லாம் வேரோடு அறுக்கப்பட்டதை போல் ஓர் குதூகலம்.சொல்லில் வரையறுக்க முடியாத அன்பை என்னுள் உற்பத்தி செய்தது.

காற்றில் அசையும் மரங்கள் என் பெயரை உச்சரிப்பதாகவும்,பூமி தாய் என் பிஞ்சு பாதங்களை தாங்குவதில் மகிழ்ச்சி கொள்வதாகவும்,இந்த சூரியன்,நிலா,நட்சத்திரம்,உலகம் எல்லாம் என்னை நேசிக்கவே படைக்கப்பட்டதாகவும் உணர்ந்தேன்.

அந்த  60 வயது கிழவியின் முத்தம்  எப்படி என் மனோநிலையை மாற்றியது  என்பதை இப்போதும் என்னால் யூகிக்க முடியவில்லை.

வாழ்க்கை அர்த்தப்பட்டதாய் உணர்ந்தேன்.தெளிந்த மனம் பெற்றேன்.

நண்பர்களே!"வாழ்க்கை சில சமயம் மகிழ்ச்சியையும்,காதலையும் நாம் எதிர்பாராதவைகளிடத்து ஒளித்து வைத்திருக்கும்.அது வெளிப்படும் போது தெளிவு பிறக்கும்!"


கோவை.சரவண பிரகாஷ்.